Sunday, November 15, 2020

4. ஆதிபர்வம் - 2. தேவர்களும் அசுரர்களும்

காஸ்யப முனிவருக்குப் பல மனைவிகள் உண்டு.

அவர்களுள், அதிதியின் புதல்வர்கள் அற வழியில் நடப்பவர்கள். அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

திதியின் புதல்வர்கள் தீய இயல்பு கொண்டவர்கள். அவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர், (சுரர்கள் என்பது தேவர்களைக் குறிக்கும் சொல். அசுரர்கள் என்பது இதற்கு எதிர்மறையான சொல்.)

தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே அடிக்கடி போர் மூண்டது. எல்லாப் போர்களிலுமே அசுரர்கள் தோற்றனர்.

திரும்பத் திரும்பத் தோல்வி அடைந்ததால் அசுரர்கள் விண்ணுலகில் இருந்த தங்கள் ராஜ்யத்தை இழந்தனர். அரசாளும் உரிமையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. 

தங்கள் சக்தியைப் பயன்படுத்தி அசுரர்கள் பூமியில் பிறவி எடுத்தனர். பிராணிகள், மனிதர்கள் என்று பல வடிவங்களில் அவர்கள் பிறந்தனர்.

அவர்கள் எல்லா வகை மனிதர்களையும் தொந்தரவு செய்து அவர்களுக்குத் துன்பம் விளைவிக்கத் தொடங்கினர். அவர்கள் முனிவர்களுக்கும் இடையூறுகள் செய்து அவர்களது தவத்துக்கும் சடங்குகளுக்கும் இடையூறுகள் செய்தனர்.

அசுரர்களின் கொடிய செயல்களால் ஏற்பட்ட சுமையைப் பொறுக்க முடியாத பூமாதேவி படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் சென்று தன் சுமையைக் குறைக்கும்படி வேண்டினார்.

தேவர்களை அவளுக்கு உதவச் சொல்வதாக பூமாதேவிக்கு வாக்களித்த பிரம்மா, தேவர்களை அழைத்து பூமியில் பிறவி எடுத்து அசுரர்களை அழிக்கும்படி அவர்களுக்குக் கட்டளை இட்டார்.

தேவர்கள் பிரம்மாவின் கட்டளையை ஏற்றுக் கொண்டனர். 

பிறகு அவர்கள் தேவர்களுக்கெல்லாம் தேவரும், தீமையை அழிப்பவருமான விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்துக்குச் சென்று, அவரும் பூவுலகில் பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளை விஷ்ணு ஏற்றுக் கொண்டார். 

பூவுலகில் தாங்கள் ஏற்க வேண்டிய பாத்திரங்களைப் பற்றி அவர்கள் விஷ்ணுவிடம் விவாதித்தனர்.

(பிரம்மாவின் கட்டளைப்படி பூவுலகில் பிறந்த எல்லா தேவர்களின் பெயர்களையும் வைசம்பாயனர் கூறுகிறார். (அது மிக நீண்ட பட்டியல் என்பதாலும், மகாபாரதக் கதையை அறிந்து கொள்ள இந்தப் பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இல்லை என்பதாலும், இந்தப் பதிவில் அது கொடுக்கப்படவில்லை.)

தேவர்கள் முனிவர்களின் வம்சத்தில் பிறந்தனர். இறுதியில் அவர்கள் அசுரர்களை முழுவதுமாக அழித்து, பூமியை வாழ்வதற்குப் பாதுகாப்பான இடமாகச் செய்தனர்.

5. ஆதிபர்வம் - 3. சகுந்தலை

3. ஆதிபர்வம் - 1. வைஸம்பாயனர் மகாபாரதக் கதையைக் கூறுகிறார்



No comments:

Post a Comment